×

கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தண்டலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தேநீர் கடை இயங்கி வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு இந்த கடைக்கு வந்த கும்பல் ஒன்று அங்கு தங்களுக்கு தேவையானதை சாப்பிட்டுள்ளனர். இந்த கும்பலை சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே கடையில் கடன் இருந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் கடன் என கேட்டதால் கொடுக்க முடியாது என ஊழியர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கடை ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டது. அப்போது அவர்களுடன் வந்த பெண் அந்த கும்பலை தடுக்க முயன்றார். அப்பெண்ணை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஊழியர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கியது. மேலும் கடையில் இருந்த பொருட்களையும், இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதில் கடை ஊழியர் ஷிஹாகு (32) முகம் மற்றும் கைகளில் காயமடைந்து ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் (20) என்பவரை பெரியபாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

The post கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Barrage ,Oothukottai ,Thandalam ,Periyapalayam ,Dinakaran ,
× RELATED கடல் போல் காட்சியளிக்கும் தாமரைப்பாக்கம் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி